தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தலில் ஓங்கிய ஜி.கே. வாசன் கை!

தமிழக மாணவர் காங்கிரஸ் அமைப்புக்கு கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் மாநில தலைவராக ப.சிதம்பரம் ஆதரவாளர் பிரபுதாஸ் வென்றார். இதைத் தொடர்ந்து தற்போது புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் தலைவர் பதவிக்கான தேர்தல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன் தினம் நடைபெற்றது. சத்தியமூர்த்தி பவனில் வாக்குகள் நேற்று தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களின் தலைவர் பதவிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 18 மாவட்டங்களின் தலைவர் பதவிகளை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆதரவாளர்களும், 11 மாவட்டங்களின் தலைவர் பதவிகளை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவாளர்களும், முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர், பிரபு ஆகியோரின் ஆதரவாளர்கள் தலா ஒரு மாவட்டத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை மாவட்டத் தலைவர் தேர்தலில் ப. சிதம்பரம் ஆதரவாளரான பத்மநாபன் வெற்றி பெற்றார். இவர் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாநிலத் தலைவர் தேர்தலில் வாசன் ஆதரவாளரான கடலூர் பெரியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர் கலையரசனும், ப. சிதம்பரம் ஆதரவாளரான திருச்சி குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரி மாணவர் ராமநாதனும் போட்டியிட்டனர். மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாசன் ஆதரவாளர் கலையரசன் கல்லூரி மாணவர் அல்ல என்று ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் நேற்று முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications