வங்கதேசத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து 142 பேர் பலி, 1,000க்கும் மேற்பட்டோர் காயம்
டாக்கா: வங்க தேசத்தில் 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 142 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள சவாரில் ரானா பிளாசா என்ற 8 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் சுமார் 3,000 பேர் பணியாற்றினர். 9வது மாடி கட்டும் பணி நடந்து கொண்டிருக்கையில் நேற்று காலை 9 மணிக்கு அந்த கட்டிடம் திடீர் என்று இடிந்து விழுந்தது. 8 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வெறும் 2 அடுக்கு ஆனது.
இந்த விபத்தில் 142 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்த நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் 7வது மாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று யாரும் பணிக்கு வர வேண்டாம் என்று ஆயத்த ஆடை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கட்டிடம் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி ஊழயிர்களை பணிக்கு வரவழைத்துள்ளது. இந்த தகவலை 6வது மாடியில் வேலை பார்த்த மர்ஜினா பேகம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கட்டிடத்தின் உரிமையாளரான ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி மொனிர் ஹுசைன் தெரிவித்தார். மேலும் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications