'சித்ரா பெளர்ணமி மிரட்டல்' விடுத்ததால் சென்னை 'அருள்வாக்கு' சாமியார் படுகொலை: 5 பேர் சரண்!
சூளைமேட்டைச் சேர்ந்த ஜானகிராம் (45) தனது வீட்டு அருகே பவானி அம்மன் கோவில் கட்டி அங்கு சாமியாடி குறி சொல்லி வந்தார். அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமர்ந்தும் பக்தர்களுக்கு குறி சொல்வார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவரிடம் குறி கேட்க ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு.
மேலும் மாந்திரீகம் செய்வது, செய்வினை வைப்பது, செய்வினை அகற்றுவது, பேய் விரட்டுவது போன்ற மாந்திரிகச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தார். பாட்ஷி சுவாமி என அழைக்கப்பட்டு வந்தார். இரவு நேரங்களில் உடுக்கை அடித்து அந்த ஏரியாவாசிகளை எரிச்சலில் ஆழ்த்தி வந்தார்.
இன்று சித்ரா பெளர்ணமியையொட்டி இவர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடராஜா தியேட்டர் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் இருந்து பவானி அம்மன் கோவிலுக்கு மாலை பால்குட ஊர்வலம் நடத்தி, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய இருந்தார். இதற்காக பெரிய அளவில் விளம்பரங்களும் செய்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை 7 மணிக்கு வீட்டருகே உள்ள டீக் கடைக்கு சென்ற இவரை ஆட்டோ வழி மறித்தது. அதிலிருந்து இறங்கிய 5 பேர் ஜானகிராமை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் முகம், கழுத்து, கை உள்ளிட்ட உடலில் 12 இடங்களில் வெட்டு விழுந்த அவர் சரிந்து விழவே வெட்டிய கும்பல் ஆட்டோவிலேயே தப்பிவிட்டது. அவரை பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.
ஜானகிராம் கழுத்தில் ஸ்படிக மாலைகள் அணிந்திருந்தார். கொலையாளிகள் அந்த மாலையை கழற்றி எடுத்து விட்டுத் தான் அவரை கழுத்தில் வெட்டி உள்ளனர்.
இந்தக் கொலையாளிகளை பிடிக்க உடனடியாக 2 தனிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந் நிலையில் சுரேஷ், வீரா, அப்பு, சாரதி, கோபால் என்ற 5 பேர் சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இவர்கள் அந்த சாமியார் வசித்த சி.கே.பி. தெருவைச் சேர்ந்தவர்கள். சரணடைந்த 5 பேரும், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.
இந்த சாமியார், செய்வினை வைத்தல், செய்வினை எடுத்தல் தொழிலும் செய்து வந்ததார். இவர் செய்த மாந்திரீக வேலையால் பெண் உள்பட 2 பேர் அந்தப் பகுதியில் இறந்து போனதாகவும், அதற்கு பழிக்குப்பழி வாங்கவே சாமியார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சித்ரா பெளர்ணமியன்று தனக்கு ஸ்பெஷல் பவர் வந்துவிடும் என்றும், தான் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பழி வாங்க முடியும் என்றும் கூறி வந்துள்ளார் ஜானகிராமன். இந் நிலையில் தான் அதே தினத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.