சீனாவை அடித்து விரட்ட வேண்டும்: 'இந்து முன்னணி' ராமகோபாலன்
தூத்துக்குடி: நரேந்திர மோடி பிரதமாவதை தடுக்க வெளி நாடுகள் சதி செய்கின்றன என்று இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியில் இந்து முன்னணி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை வகுப்புகளை துவக்கி வைத்த ராமகோபாலன் பெங்களூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள கிச்சன் புகாரியின் மீது இதுவரை காவல்நிலையங்களில் பதிவாகியுள்ள குற்ற வழக்குகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் தற்போது சோதனைச் சாவடிகள் எதுவும் இல்லை. இதனால் வாகனச் சோதனை சாவடிகளை அமைப்பதுடன் அப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கை அல்லாத வேறு நாட்டில் நடத்தவேண்டும். ஏனெனில் அது மனித உரிமை மீறல் நடந்த நாடாகும். அதனால் வேறு நாட்டில் நடத்துவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.
இந்தியாவின் பாரம்பரிய சின்னமான ராமர் பாலத்தை எக்காரணம் கொண்டும் இடிக்ககூடாது.
இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று மத்திய அரசு சொல்வது சரியல்ல. இதில் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது?. சீனாவை அடித்து விரட்டவேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனம் மட்டுமல்ல, நமது கையாளாகதனத்தை காட்டுகிறது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
முன்னாள் பிரதமர் நேருவிற்கு பிறகு சீனாவின் அத்துமீறல்கள் தொடர்பான செயல்களில் யாரும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. சீனாவின் குப்பைகள் அனைத்தும் இந்தியாவிற்குள் இறக்குமதியாகிறது. இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள்.
சிறைச்சாலைகள் அனைத்தும் பயங்கரவாதிகளுக்கு நல்ல தீனி போடுகின்றன. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் நாட்டை காப்பாற்ற சக்தியற்றது.
'கூடங்குளம் நாளை திறக்கப்படும்', 'சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது', 'எரிபொருள் நிரப்பியாச்சு' என்பது போன்ற தகவல்கள் தமாஷாக உள்ளது. இதில், அனைத்துக்கட்ட சோதனைகளையும் முடித்த பின்பு திறப்பது குறித்து அறிவிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு மின்சாரம் வேண்டும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். ஏனெனில் அவர் திறமைசாலி, தகுதியானவர், அவரால் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். நரேந்திர மோடி பிரதமராக வராக்கூடாது என்பதற்காக வெளி நாடுகள் சதி செய்கின்றன என்றார்.
பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் செல்வ சுந்தர், ராதாகிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.