ஜெயலலிதாவுக்கு 'குடைச்சல்' கொடுக்க மத்திய அரசு 'சீக்ரெட் ப்ளான்'?
தமிழக மாநிலப் பிரச்சனைகள், தேசிய பிரச்சனைகள், இலங்கைத் தமிழர் பிரச்சனை அனைத்திலுமே மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழ்நாட்டுக்கான எந்த ஒரு உதவியையுமே மத்திய அரசு செய்யவில்லை என்பதும் அவரது குற்றச்சாட்டு. ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட மதிக்கவில்லை மத்திய அரசு என்பதும் ஜெயலலிதாவின் சாடல்.
இப்படி அனைத்து வகையிலும் மத்திய அரசை விமர்சிக்கும் ஜெயலலிதாவுக்கு ஒரு செக் வைக்கும் விதமாக சில நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதாம். முதல் கட்டமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் சொத்து விவரங்களைத் தோண்ட உத்தரவிட்டிருக்கிறதாம். அதுவும் குறிப்பாக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் செயலர்களான ஷீலா ப்ரியா, ராம்மோகன் ராவ் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோரது சொத்து விவரங்களை மத்திய அரசின் ரகசிய பிரிவு சேகரித்து வருகிறதாம்.
இதைத் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.