நாடாளுமன்றத் தேர்தலில் சுப்பிரமணிய சாமி மீண்டும் மதுரையில் போட்டி?

1998ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுப்பிரமணிய சாமி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராம்பாபுவை தோற்கடித்தார்.
தேர்தலில் வெல்லும் முன் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்றெல்லாம் புருடா விட்டார். ஆனால், மதுரைக்கு உருப்படியாக எந்த வேலையையும் செய்யவில்லை. மாலையில் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, முகத்துக்கு நேராக போகஸ் லைட் அடித்துக் கொண்டு, கருப்புப் பூனைப் படையினரின் சைரன்கள் அடிக்கும் கார்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க மதுரை பீபிகுளம் ஏரியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கிளம்பி போய்விட்டு திரும்பி வருவார். (ஆமா, இவருக்கு இன்னும் எதுக்கு கருப்புப் பூனைப் படை?)
என் சொந்த ஊர் சோழவந்தான் தான், நான் மதுரைக்காரன் தான் என்றெல்லாம் சொன்னாலும் பெரும்பாலும் டெல்லியிலும் சென்னையில் தான் இருந்தார். இவரது டெல்லி பாசத்தை மதுரை மக்கள் லேட்டாக உணர்ந்ததால் அடுத்த தேர்தலில் இவரை தோற்கடித்து நிரந்தரமாக டெல்லியிலேயே தங்கியிருக்க வசதி செய்து கொடுத்தனர்.
இந் நிலையில் இப்போது பாஜக கூட்டணியில் இடம் வாங்கி வைத்துள்ள சாமிக்கு மீண்டும் மதுரையில் போட்டியிடும் ஆசை வந்துவிட்டதாம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், நிலைமையைப் பொறுத்து, பாஜக-அதிமுக கூட்டணி உருவாகலாம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், பாஜக கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிட ஆசைப்படுகிறாராம் சாமி. இது தொடர்பான தனது விருப்பத்தை அத்வானியிடம் வெளிப்படுத்திவிட்டாராம்.
தேர்தலுக்கு முன் பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு குறைவே என்றாலும் மதுரையில் தான் போட்டியிட்டால் அங்கே அதிமுக தனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவலாம் என்ற நம்பிக்கையும் சாமியிடம் உள்ளது.
அந்தத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் மாதிரியான கட்சிக்கு அதிமுக ஒதுக்கலாம். அதே நேரத்தில் தனக்கும் மறைமுகமாக உதவலாம் என்பது சாமியில் கணக்கு.
கணக்கு போடுவதில் தான் சாமி வல்லவராச்சே..












Click it and Unblock the Notifications