இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 மீனவர்கள்
ராமேசுவரத்தைச் சேர்ந்த தேவதாஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்களான மார்ட்டின், ஆரோக்கிய குரூஸ், பூவேந்திரன், அந்தோனி அடிமை ஆகியோரின் விசைப்படகுகளில் 30 மீனவர்கள் ஏப்ரல் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் 30 பேரையும் இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி கைதுசெய்து தலைமன்னார் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தியபோது அனைவரையும் ஏப்ரல் 18-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது..
இந்நிலையில் அவர்களை, போலீசார் மீண்டும் ஏப்ரல் 18-ந் தேதி ஆஜர்படுத்தினர். அப்போது ஏப்ரல் 26-ந் தேதி வரை தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனால் அவர்கள் அனேகமாக விடுவிக்கப்படக் கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால் நேற்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி, அவர்களை மே 6-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
26 காரைக்கால் மீனவர்கள்
ஏப்ரல் 5-ந் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்களையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் 26 பேரையும் மே 29-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 56 தமிழக மீனவர்களின் காவலும் நீட்டிக்கப்பட்டு சிறைவாசம் தொடர்வது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications