பதவிக்காக இந்த பாதயாத்திரை இல்லை… வைகோ
ஈரோடு: அரசியல் நோக்கத்துடனோ பதவிக்காகவோ இந்த பாதையாத்திரை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை வைகோ நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை நத்தக்காடையூரில் இருந்து புறப்பட்டு மருதுறை, கே.ஜி.வலசு வழியாக சென்னிமலைக்கு வந்தார். பின்னர் சென்னிமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு அவர் பேசியதாவது:
நான் பதவிக்காக இந்த நடைபயணத்தை நடத்த வில்லை. மதுவை தடை செய்யகோரி நடைபெறும் இந்த நடைபயணத்திற்கு ஏராளமான தாய்மார்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவே இந்த நடைபயணம். சென்னிமலையில் கைத்தறி தொழிலை நம்பி ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நூல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
நெசவு தொழிலாளர்கள் தங்களின் 80 சதவீத கூலியை மதுக் கடையில் கொடுத்து விடுகிறார்கள். பதவிக்காக போராடமல் கடைசி வரை நேர்மையை கடைபிடிப்பேன். மது போதை மனிதனின் உடல், ஒழுக்கம் பண்பாட்டை கெடுத்து விடுகிறது. அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் ம.தி.மு.க.வை எதிர் பார்க்கிறார்கள் இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.