தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை- தொடரும் நிபுணர் குழு ஆய்வு!
வழக்கு
விஷவாயு கசிவு ஏற்பட்டதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை 30-ந்தேதி மூடப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பசுமைத் தீர்ப்பாய உத்தரவு
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழுவை அமைத்து கடந்த 19-ந் தேதி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழுவின் தலைவராக சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் பி.எஸ்.டி.சாய், உறுப்பினராக அதே கல்வி நிறுவன பேராசிரியர் லெஜி பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவுக்கு உதவி செய்ய ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் பொது மேலாளர்(சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல்) டி.சுமதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் (சுற்றுச்சூழல்) மோகன் நாயுடு ஆகியோரையும் பசுமை தீர்ப்பாயம் நியமித்திருந்தது,
பசுமை தீர்ப்பாயம் நியமித்த இந்த நிபுணர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 23-ந்தேதி ஆய்வு நடத்தினர். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வு நடத்திய அவர்கள் இன்று 2வது கட்டமாக 4-வது நாள் சோதனையை நடத்தினர். வருகிற 29-ந்தேதிக்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் அதற்குள் நிபுண ர்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்வர்..