சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர் ரயிலில் ஏ.சி. மக்கர்.. பயணிகள் அவதி- புகார், ரயில் தாமதம்!
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை சென்ற டபுள் டெக்கர் ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
சென்னை- பெங்களூர் இடையே கடந்த 25ம் தேதி முதல் டபுள் டெக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று பகல் 2.40 மணிக்கு இந்த ரயில் பெங்களூரில் இருந்து புறப்பட்டது. ஆனால், அதில் சி.1, சி.5, சி.10 ஆகிய 3 பெட்டிகளில் ஏசி வேலை செய்யவில்லை. மற்ற பெட்டிகளில் ஏசி விட்டு விட்டு வேலை செய்தது.

இந்த ரயிலில் ஜன்னல்களையும் திறக்க முடியாது என்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மூச்சு முட்ட ஆரம்பித்த நிலையில், இந்த ரயில் மாலை 5 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தது. இதையடுத்து ரயில் தங்களை விட்டுவிட்டுப் போய்விடாமல் தவிர்க்க செயினைப் பிடித்து இழுத்துவிட்டு, சில பயணிகள் இறங்கி, ஜோலார்பேட்டை ஸ்டேசன் மாஸ்டரிடம் ஏசி விவகாரம் குறித்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒரு மெக்கானிக்கு வந்து ஏசி யூனிட்டை சுற்றிச் சுற்றி வந்தார். ரெண்டு தட்டி தட்டிப் பார்த்தார். பின்னர் இதை இங்கே ரிப்பேர் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
இதையடுத்து பயணக் கட்டணத்தைத் திருப்பித் தர ஏற்பாடு செய்வதாகவும், ஏசியை இங்கே ரிப்பேர் செய்ய வசதிகள் இல்லை என்றும் ஸ்டேசன் மாஸ்டர் கூறிவிட்டார்.
இதையடுத்து தங்களை நொந்து கொண்டு பயணிகள் மீண்டும் அந்த ரயிலில் ஏறினர். இதனால் அந்த ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்னைக்குப் புறப்பட்டது.
சாதாரண ரயிலில் பயணம் செய்திருந்தால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு அனல் காற்றையாவது உடலில் வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம்.












Click it and Unblock the Notifications