சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்: அக்டோபர் 1 முதல் வங்கிகளில் வரவு

உங்கள் பணம் உங்கள் கையில்
"உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற திட்டத்திற்கு, முக்கியத்துவம் அளித்து வரும் மத்திய அரசு, மானிய பலன்கள் மற்றும் நிதியுதவி அனைத்தும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி மக்களுக்கு வழங்கும் மானியங்கள் அனைத்தும் நேரடியாக அவர்களின் கைகளுக்குச் சென்று சேரும் என்பது மத்திய அரசின் எண்ணம். "ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள, 32 கோடி பேரில், 80 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் மட்டுமே, "ஆதார்' அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. எனவே, ஆதார் அடையாள அட்டை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, அந்த அட்டையுடன், வங்கிக் கணக்கையும்இணைக்க, பொதுத் துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இப்பணியை துரிதப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் முதல், சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 சிலிண்டர்களின் மானியம்
9 சிலிண்டர்கள் தற்போது மானிய விலையில் கிடைக்கிறது. அதன்படி மானியத்தொகையாக, ஆண்டுக்கு, 4,000 ரூபாய், பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, மானியம் மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
20 மாவட்டங்களில் வரவு
முதற்கட்டமாக மே மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் காஸ் சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.
முழு பணமும் செலுத்த வேண்டும்
அத்தகைய நிலையில், சமையல் காஸ் சிலிண்டரின் மொத்த விலையை, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, ஒவ்வொரு முறை சமையல் காஸ் சிலிண்டர் மாற்றும்போதும், அதன் மொத்த விலையை கொடுக்க வேண்டும்.
அதுபோல, பிற மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளும் வரவு வைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம், பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர், அடங்கிய குழுவினர் இன்று பேசி முடிவு செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications