ஈழத் தமிழர் விவகாரம்: மாணவர்கள் போரட்டம் மீண்டும் தொடங்குகிறது- மே.5 முதல் சுடர் பயணம் தொடக்கம்!
நெல்லை: இலங்கை இனப்படுகொலையை நடத்திய மகிந்த ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள். இவர்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி மே 12ந் தேதி அன்று காலை புறப்படுகின்றனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரியில் புறப்பட்டு கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,திருச்சி.வழியாக தஞ்சைக்கும் கன்னியாகுமரியில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,சிவகங்கைபுதுக்கோட்டை,வழியாக தஞ்சைக்கும் விருதுநகரில் தொடங்கி தேனி, மதுரை, திண்டுக்கல் ,கரூர்,திருச்சி வழியாக தஞ்சைக்கும் சென்னையில் தொடங்கி திருவள்ளூர்.காஞ்சி,விழுப்புரம்,புதுச்சேரி,கடலூர்,நாகப்பட்டினம்,திருவாரூர் வழியாக தஞ்சைக்கும் தர்மபுரியில் தொடங்கி கிருஷ்ணகிரி.வேலூர்.திருவண்ணாமலை.பெரம்பலூர்.அரியலூர்.வழியாக தஞ்சைக்குமாக 5 குழுக்கள் பயணிக்கின்றன.
மாணவர்களின் இந்த சுடர் பயணம் தஞ்சாவூரில் மே 17ந் தேதி அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமிக்கிறது.அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள்,பொதுமக்கள் ,வணிகர்கள் உள்ளிட்ட தமிழர் ஆதரவு அமைப்புக்கள் அனைவரும் திரளான வரவேற்பு வழங்கிட இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கருத்தரங்கம்
இதனிடையே தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,. இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக செல்வா தலைமையில் அமைதி வழியில் நடந்தது முதல் கட்ட போராட்டம். அடுத்து பிரபாகரன் தலைமையில் ஆயுதவழி போராட்டம் நடைபெற்றது. எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ? அதே மாதிரி ஆயுதவழி போராட்டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது. வீழ்வது தவறல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. நாம் மீண்டும் எழுவோம். இப்போது நடப்பது மூன்றாவது கட்ட போராட்டம். ராஜபக்சேவுக்கும் அவனது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத் திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப்போராட்டம். இந்த சிக்கலை உலக நாடுகளூக்கு கொண்டு சென்று அதன் மூலமாக வெற்றியைப்பெறுவோம் என்றார்.