தமிழக அரசியல் பரபரப்பை பற்ற வைத்த திருமா-விஜயகாந்த் சந்திப்பு- பறபறக்கும் ஆரூடங்கள்!
சென்னை: தமிழக அரசியல் கடந்த சில மாதங்களாக அதிரடியாக அரசியல் சந்திப்புகள் நடந்தேறி தேர்தலுக்கான கூட்டணியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் தொல்.திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசி அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறார்.
தமிழக அரசியலில் ஏற்கெனவே ஐந்து சந்திப்புகள் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டன. முதல்வர் ஜெயலலிதா- வைகோ, காங்கிரசார்- மு.க. அழகிரி, கருணாநிதி- விஜயகாந்த், வாசன் - அழகிரி- கனிமொழி, உ.பி. முதல்வர் அகிலேஷ்- முதல்வர் ஜெயலலிதா, அகிலேஷ்- ராமதாஸ் சந்திப்புகள் எதிர்கால தமிழக, தேசிய அரசியல் களத்தில் அணி சேர்க்கை எப்படியாக இருக்கும் என சுட்டிக்காட்டி நிற்கின்றன.
இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்குள் 'மரக்காணம்' கலவரத்தை முன்வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் திடீரென நேரில் சென்று அதிரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். 'மரக்காணம்' கலவரத்தையொட்டியே திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார் என்று சொன்னாலும் அரசியல் ஆடுகளம் அப்படியே அமைதியாக இருந்துவிடுமா? ரெக்கை கட்டி பறக்காத ஆருடங்கள்...

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அணியில் இருந்து கழன்று கொண்ட திமுக எப்படியாவது தேமுதிகவுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்தித்தாக வேண்டிய நிலை இருக்கிறது. இதற்காக திமுக தரப்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே மரக்காணம் கலவரத்தை வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை திருமாவளவன் சந்தித்தார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் வடதமிழ்நாட்டில் 'செல்வாக்குடன்' இருக்கும் தேமுதிகவும் கணிசமான வாக்கு வங்கியுடன் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைவதால் தமக்கு பெரும் பலம் கிடைக்கும் என்பது திமுக தலைமையின் கணக்கு.

விஜயகாந்தும் வட தமிழ்நாடும்
விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரையாக இருந்தாலும் அவரது அரசியல் பிரவேசத்துக்கு சுழி போட்டுக் கொடுத்து ஏற்றம் கொடுத்தது வட தமிழ்நாடுதான். விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பாமக கடுமையாக எதிர்த்தபோது அதே பாமகவின் கோட்டையில் அதே பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர் சமூகத்தின் பேராதரவுடன் வென்றவர் விஜயகாந்த்.
வன்னியர்களின் தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டாலும் வன்னியர்களிடம் செல்வாக்கு பெற்ற சக்தியாக உருவெடுத்தவர் விஜயகாந்த்.

தொல். திருமாவளவனும் வட தமிழ்நாடும்
இதே நிலைதான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும்.... தென் மாவட்டங்களில் பிறப்பெடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வட மாவட்டங்களில் தான் செல்வாக்கு மிக்க கட்சியாக உருவெடுத்தது. இதனால்தான் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் வட மாவட்டங்களில் கை கோர்த்து வலம் வந்தன. இந்த ஒற்றுமையால்தான் சிறிதுகாலம் வட தமிழ்நாடு சாதி மோதலற்ற பிரதேசமாக இருந்தது.

விஜயகாந்த்- திருமா சந்திப்பால் பயன்?
இந்த கால்குலேஷன்களின் அடிப்படையில்தான் மரக்காணத்தை முன்வைத்து விஜயகாந்த்- திருமா சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் மரக்காணத்தில் நிகழ்ந்த மோதல்களைப் பற்றி கேப்டனிடம் திருமா விரிவாக விவரித்திருக்கிறார். அத்துடன் மரக்காணம் வன்முறையைக் கண்டித்து சமூக நல்லிணக்க கூட்டம் ஒன்று நடைபெறப் போவதாகவும் அதில் விஜயகாந்த் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திருமா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆஹா 'கூட்டணியை' கன்பார்ம் பண்ணுவாங்களோ என்று ஜகா வாங்கிய விஜயகாந்த், அன்றைய தேதியில் நான் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார். திருமாவும் மகிழ்ச்சியோடு திரும்பியிருக்கிறார். திமுகவோ, இந்த அணி சேர்ந்துவிட்டால் வட தமிழகத்தில் 10 தொகுதி நிச்சயம் என்று நம்பிக்கையோடு இருக்கிறது

விஜய்காந்துக்குத்தான் இழப்பா?
அதே நேரத்தில் இன்னொரு வாதமும் முன் வைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்திருக்கும் 'வன்னியர் ஒருங்கிணைப்பு' விவகாரம் என்பது முன்னெப்போதையும் விட வலுவானது என்றும் திருமாவளவனுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தால் நிச்சயம் அவரது வன்னியர் வாக்கு வங்கி சரியும் என்கிறது பாமக தரப்பு. ஆனாலும் ஏற்கெனவே திருமாவுடன் ராமதாஸே கூட்டு சேர்ந்தவர்தானே. அதனால் அப்படியொன்றும் விஜயகாந்த் சேருவதால் இழப்பு ஏற்பட்டுவிடாது என்றொரு வாதப் பிரதிவாதங்களும் உருவாகி இருக்கிறது..
இன்னும் வரும்ல சந்திப்புகள்...












Click it and Unblock the Notifications