சோனியா வீட்டுக் கதவைத் தட்டும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங்: அத்வானி குற்றச்சாட்டு

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து ஹுப்ளியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:-
கர்நாடகம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படும் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசைப் போல், காங்கிரஸ் முதல் மந்திரிகளின் ஆட்சி நடைபெறும் மாநில அரசுகள் சரியாக இயங்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
கர்நாடகத்தை பொருத்தமட்டில், ஆட்சியில் இருந்த குறைபாடுகள் பின்நாட்களில் சீர்படுத்தப்பட்டு விட்டன.
நேற்று பெங்களூர் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்திக்க நேர்ந்திருந்தால், 'மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநில பொதுத் தேர்தல்களுடன் நாடாளுமன்ற தேர்தலையும் வைத்துக் கொள்ளுங்கள்' என அறிவுறுத்த விரும்பினேன்.
முன்னாள் பிரதமர்களான தேவே கவுடா, சந்திர சேகர், குஜ்ரால் போன்றவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரதமருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி சிறப்பான முறையில் நாட்டை வழி நடத்தினார்கள்.
இந்தியாவில் பிரதமருக்கு உள்ள அதிகாரத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்ட அதிகாரம் படைத்த பிரதமர் மன்மோகன் சிங், மிகவும் பலவீனமான பிரதமராக உள்ளார். சுயமாக முடிவெடுக்க இயலாத மன்மோகன் சிங்கைப் போன்ற பலவீனமான பிரதமரை இதுவரை நான் பார்த்ததே கிடையாது.
எந்த முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் சோனியா காந்தி வீட்டின் கதவை தட்டும் பிரதமராக மன்மோகன் சிங் உள்ளார். அவர் நல்லவர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அவர் பலவீனமான பிரதமராக உள்ளார்.
பலவீனமான பிரதமரின் தலைமையில் ஒரு நாடு முன்னேற்றம் அடையவே முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications