நிலக்கரி ஊழல்: உண்மைகளை மறைக்க முயலும் அட்டர்னி ஜெனரல்: கூடுதல் அட்டர்னி பகீர் புகார்

இது தொடர்பாக வாகன்வதிக்கே ஹரின் ராவல் கடிதம் எழுதி, அந்தக் கடிதத்தை மீடியாக்களுக்கும் 'லீக்' செய்துள்ளார்.
இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டதில் நடந்த ஊழலால் நாட்டுக்கு பல லட்சம் கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜராகி வருபவருவர் மத்திய அரசுன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான ஹரின் ராவல்.
இந் நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ கடந்த வாரம் 'சீல்' வைத்த உறையிலிட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது. இதை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரான ஹரின் ராவல் தான் சமர்ப்பித்தார்.
அப்போது, இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை மத்திய அரசை சேர்ந்த எவரும் பார்க்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒரு பிரதமர் அலுவலக அதிகாரி, சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், ஒரு நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரி ஆகியோர் இந்த அறிக்கையை பார்த்துள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் பின்னர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இவர் போட்ட குண்டில் மத்திய அரசு வெலவெலத்துப் போய் உள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் முழுப் பழியையும் ஹரின் ராவல் மீது போட்டுவிட்டு மத்திய அரசை, குறிப்பாக சட்ட அமைச்சரையும் பிரதமரையும் காப்பாற்றும் முயற்சிகள் மறைமுகமாக நடந்து வருகின்றன.
இந் நிலையில் தான் இந்த விவகாரத்தில் நான் பலிகடா ஆக்கப்படுவதாக ராவல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் வாகனாவதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மாதம் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாருடன் நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டம், அந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த சிபிஐ அறிக்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அஸ்வனி குமார் கூறியது,
அஸ்வனி குமாரின் அலுவலகத்துக்கு விசாரணை அறிக்கையை எடுத்துக் கொண்டு வருமாறு தனக்கு அட்டர்னி ஜெனரல் வாகனாவதி எஸ்.எம்.எஸ். அனுப்பியது போன்ற விவரங்களை ஹரின் ராவல் தனது கடிதத்தில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ராவல் தனது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாகத் தெரிகிறது.
இந்த ஊழலில் உச்ச நீதிமன்றத்திலேயே மத்திய அரசு உண்மைகளை மறைக்க முயல்வது அம்பலமாகியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது.
இந்த நிலையில் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். சட்ட அமைச்சகமோ, பிரதமர் அலுவலகமோ எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications