ஸ்டெர்லைட் வழக்கு: டெல்லி பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றம்
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த மார்ச் 23-ஆம் தேதி நச்சு வாயு வெளியானது. பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராடியதை அடுத்து, சோதனை செய்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல பெஞ்சிடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட சிலர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு எதிராக இந்த வழக்கில் தங்களை எதிர் மனுதாரர்களாக இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையின் நிலை குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த நிபுணர் குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், துறைசார் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சில எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக தங்களால் இந்த வழக்கை தொடர்ந்து இங்கு விசாரிக்க இயலாது என்று நீதிபதி சொக்கலிங்கம் தெரிவித்தார்.
இந்த வழக்கினை டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றுமாறு தீர்ப்பாயத்தின் தலைவரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை டெல்லி முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.