நீலாங்கரையில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 3 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: நீலாங்கரையில் வழிப்பறியில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் திருக்குமரன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தேவன்(45). அவரது மனைவி வான்மதி(40). கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவனும், மனைவியும் கடற்கரைக்கு பைக்கில் சென்றனர். கடற்கரையில் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினர். வழியில் பைக் பழுதடைந்தது. இதையடுத்து இருவரும் பைக்கை தள்ளிக் கொண்டு சென்றனர்.
அப்போது பைக்கில் வந்த நபர்கள் வான்மதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். தேவன் அந்த பைக்கின் பதிவு எண்ணை குறித்து வைத்து அதை நீலாங்கரை காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பார்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தினர்.
அப்போது வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் பார் ஒன்றில் அந்த பைக் நிற்பது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் அந்த பைக்கில் வந்தது தூத்துக்குடியைச் சேர்ந்த அப்துல் காதர் (24), மதுரையைச் சேர்ந்த யூசுப் (22), மதுரவாயலைச் சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்ததில் வான்மதியின் நகையை பறித்துச் சென்றது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலை, அடையாறு, மதுரவாயல் போன்ற இடங்களில் வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது. அந்த 3 பேரும் மதுரவாயலில் வீடு எடுத்து தங்கி பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்.சி. 2வது ஆண்டு படித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களுக்கு 20க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. அவர்கள் இதுவரை சுமார் 100 பவுன் தங்க நகைகளை வழிப்பறி செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அம்மூவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications