கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சி. பிளான்..சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?!

கடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தோற்றுவிட்டதாகவே அறிவிக்கப்பட்டவர் ப.சிதம்பரம். ஆனால் எப்படியோ திடீரென வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட அது தொடர்பான வழக்கு இன்னமும் ப.சிதம்பரத்தின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக இருந்து வருகிறது. நிச்சயமாக மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பது ப.சிதம்பரத்தின் கணிப்பாக இருந்து வருகிறது. அதுவும் தமிழகத்தில் திமுகவுடனும் கூட்டணி இல்லை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்புதான்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தையும் ஒரு பிரதமர் வேட்பாளராக சில லாபிகள் முன்னிறுத்திப் பார்க்கின்றன. ஆனால் தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறியிருக்கும் சிதம்பரம் கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன் என்று கூறிவருகிறார். மேலும் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அனேகமாக சிதம்பரம் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக மீதான கடும் அதிருப்தியால் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இதனால் ப.சிதம்பரமும் ஒரு வியூகம் வகுத்து வைத்திருக்கிறார்.
அதாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெல்லும் நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா கோட்டா மூலம் எம்.பி.யாகிவிடுவது என்று ப்ளான் போட்டு வைத்திருக்கிறாராம் சிதம்பரம். சிவகங்கை தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கிவிடுவது என்றும் தீர்மானித்திருக்கிறாராம் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications