எல்லை ஊடுருவல், சரப்ஜித்சிங் படுகொலை.. சீனாவும் பாகிஸ்தானும் திட்டமிட்டு கொடுக்கும் நெருக்கடி?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிராந்தியத்தில் ஊடுருவல் , அதே நேரத்தில் பாகிஸ்தான் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங் படுகொலை என அடுத்தடுத்து நடந்தேறி வரும் சம்பவங்கள் அனைத்தும் இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டு நடத்திய சம்பவங்களா என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

சீனாவின் ஊடுருவல்...
ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவுக்குள் ஊடுருவி கடந்த 15 நாட்களாக சீன ராணுவத்தினர் ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர். ஆனால் 15 நாட்களுக்கும் மேலாகியும் அது தங்களது பிரதேசம் என ஊடுருவி அங்கேயே டேரா போட்டுக் கொண்டிருக்கிறது சீனா.

கையை பிசையும் மத்திய அரசு...
இருதரப்பு கொடிய் அமர்வு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில் எந்த ஒரு கடுமையான எச்சரிக்கை கூட இந்திய அரசு தரப்பில் விடுக்கப்படவில்லை. மத்திய அரசின் நிலைமையைப் பார்த்தால் 'கையை பிசைந்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்குவதாகத்தான் இருக்கிறது.

இலங்கை-அமெரிக்கைவை எச்சரித்த இந்திரா...
1980களில் இந்தியாவுக்குள் அல்ல.. இலங்கையின் திருகோணமலை பகுதியில் அமெரிக்கா தமது வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் வானொலை நிலையத்துக்கு நிலத்தைப் பெற்ற போது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து பேசியவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.

மத்திய அரசு பெரும் தயக்கம்...
இந்தியாவைச் சுற்றிய அண்டை நாடுகள் கூட இந்தியாவின் பாதுகாப்பு நலனை மதித்தே பிற நாடுகளை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்ற தெளிவான வெளியுறவுக் கொள்கை இருந்தது. இது அண்டை நாடுகளை அச்சம் கொள்ளவும் வைத்தது.
ஆனால் இன்று இந்திய மண்ணுக்குள்ளேயே நுழைந்து சீன ராணுவம் முகாமிட்டுக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் பேசிக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசோ தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறது.

சரப்ஜித் சிங் அநியாய கொலை...
இந்த நெருக்கடியான ஒரு நேரத்தில்தான் பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் காரணமே இல்லாமல் இந்தியரான சரப்ஜித்சிங் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சரப்ஜித் சிங் ஒரு தூக்கு கைதியாக பாகிஸ்தானில் இருந்தவர் . அவர் மீது திட்டமிட்டு கொலை வெறித்தனமாகவே ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் சீனாவால் நெருக்கடி... பாகிஸ்தானிலோ இந்திய கைதி படுகொலை என அடுத்தடுத்து கொடுக்கப்படும் நெருக்கடியானது சீனா, பாகிஸ்தான் இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டு நடத்தியதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வலிமையான அரசு தேவை..
இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து அதன் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு தடுமாற்றமானது என்பதை அசைத்துப் பார்க்கும் சதி நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு வலிமையான மத்திய அரசின் அவசியத்தையும் தெளிவான வெளியுறவுக் கொள்கை கொண்ட பிரதமரின் அவசியத்தையும் இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

மத்திய அரசு முடங்கிப் போய் கிடக்கிறது...
இதை வெளிப்படையாக பேசி இருக்கிறார் பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி. "இந்திய அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையை பாகிஸ்தானும் சீனாவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த அடிப்படையில்தான் சீனாவின் ஊடுருவலும் சரப்ஜித்சிங் படுகொலையும் ந்டந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்திய அரசைப் பொறுத்தவரையில் இந்த இரு நாடுகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் முடங்கிப் போய்கிடக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications