லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல்: பிரதமரிடம் ராணுவ தளபதி விளக்கம்

சீன ஊடுருவல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிராந்தியம் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் 50 பேர் கொண்ட சீன படைப்பிரிவு கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு ஊடுருவியது. அந்த படையினரை இந்தோ-திபெத் எல்லை படையினர் 9 கி.மீ. தூரம் பின்வாங்கி செல்ல வைத்தனர். இருப்பினும், இந்திய பகுதிக்குள் 19 கி.மீ. தூரத்தில் சீன படையினர் கூடாரம் அமைத்து முகாமிட்டுள்ளனர். அடுத்தடுத்து 5 கூடாரங்கள் எழுப்பி உள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிக்கு இந்திய ராணுவம், தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
கொடியமர்வு பேச்சுகள் தோல்வி
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற 3 கட்ட 'கொடி அமர்வு' பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. சீன படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா வற்புறுத்தியது. ஆனால் இதை சீனா ஏற்கவில்லை. இதற்கு பதிலாக கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவம் அமைத்த கட்டமைப்புகளை அழிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது சீனா. இதனால் இப்பிரச்சினையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி வருகின்றன.
பிரதமருடன் ஆலோசனை
இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் நேற்று சந்தித்தார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி விக்ரம்சிங் கலந்து கொண்டார். சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications