ஃபேஸ்புக், ட்விட்டரில் சென்னை போலீஸ்: ஃபேக் ஐடிகளுக்கு ஆப்பு!

ஃபேஸ்புக், ட்விட்டரில் போலி ஐடிகள் மூலம் கலாய்ப்பவர்களை பிடிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னை போலீசார் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு துவங்கி தீவிரமாக கண்காணிக்கவிருக்கின்றனர். இதற்காக சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தலைமையில் தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சமூக விரோத கும்பல்கள் சமூக வலைத்தளத்தில் செய்யும் வெறுப்பு பரப்புரைகளை தடுத்து நிறுத்துவது இதன் நோக்கம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஒட்டி தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது குறித்து காவல் துறை கருத்து தெரிவித்துள்ளது. சில இயக்கங்கள் மக்கள் ஆதரவை பெறுவதற்கும், மக்களை ஒன்று திரட்டுவதற்கும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து வந்தன.
மேலும் எங்கு எப்போது ஒன்று கூட வேண்டும் என்றும் ஃபேஸ்புக்கில் செய்தியை பரிமாறிக் கொண்டனர். இலங்கை போரின் போது நடந்த கொடூர காட்சிகளையும் அப்லோட் செய்தனர். மேலும் சில செய்திகள் இலங்கை மக்களுக்கு எதிராக கோபத்தை தூண்டும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு எதிராகவும் இருந்தன என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இதையெல்லாம் இனி வரும் காலத்தில் உன்னிப்பாக கவனிப்போம். மக்களின் பொது அமைதியை கெடுக்கும், பதற்றத்தை
ஏற்படுத்தும் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவோம். போலி அடையாளத்தில் வந்து பதிவிட்டாலும், யார் எங்கிருந்து பதிவிடுகிறார்கள்
என்ற செய்தியை அறிந்து அதை முடக்குவோம். தேவைபட்டால் அவர்களது ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கையும் முடக்குவோம்.
எனினும் தனி மனிதர்களின் தனிப்பட்ட விஷயங்களில் காவல்துறை மூக்கை நுழைக்காது என்றார்.












Click it and Unblock the Notifications