சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் மதுரை லாட்ஜில் தற்கொலை
மதுரை: சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் மதுரை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த லட்சுமிநாராயணன் (33) சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
லட்சுமிநாராயணனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந் நிலையில் அவர் மதுரைக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து லட்சுமிநாராயணனை காணவில்லை என்று தாம்பரம் போலீசில் அவரது மனைவி புகார் தந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், மதுரையில் ஒரு லாட்ஜில் பிணமாகக் கிடந்தார்.
மதுரைக்கு கடந்த 1ம் தேதி வந்த லட்சுமிநாராயணன், டவுன்ஹால் ரோட்டில் ஒரு லாட்ஜில் தங்கினார். அறையில் இருந்து அவர் வெளியே வரவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தரவே அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். வந்த தினமே அறைக்குள் நுழைந்த உடனேயே அவர் விஷம் குடித்ததாகத் தெரிகிறது.
அந்த அறையை போலீசார் சோதனையிட்டபோது, அவர் தன் மனைவிக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது முதலீடுகள், சொத்து பத்திரம் உள்ள இடம், வங்கியில் உள்ள பண விவரம், கடன் அளவு ஆகியவை குறித்து விரிவாக எழுதி வைத்திருந்தார்.
லட்சுமிநாராயணன் தற்கொலைக்கு மனைவியுடனான கருத்து வேறுபாடு தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications