டாக்டர் ராமதாசுக்கு ஜாமீன்.. வெளியே வருவதில் சிக்கல்

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 364 பேர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர் கைது செய்யப்பட்ட அன்று இரவே வக்கீல் துரைமுருகன், ராமதாசுக்கு ஜாமீன் கோரி விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். புதன்கிழமை மே தினத்தை ஒட்டி அரசு விடுமுறை என்பதால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. நேற்று அந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் கோர்ட்டில் புதிய மாஜிஸ்திரேட்டாக (எண்-1) சென்னை எழும்பூர் கோர்ட்டில் பணிபுரிந்த சிவக்குமார் நேற்று மதியம் பதவியேற்றார். அப்போது பாமக வழக்கறிஞர்கள் டாக்டர் ராமதாசின் ஜாமீன் மனுவை விசாரிக்க கோரினர்.
மாஜிஸ்திரேட் சிவக்குமார் இம்மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று கூறி மனுவை ஒத்தி வைத்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் போடப்பட்ட வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் அவர் மீது புதிதாக மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளதாலும், இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பெற்றிருப்பதாலும் இப்போதைக்கு ராமதாஸ் சிறையிலிருந்து வெளி வர முடியாது என்றே தெரிகிறது.
ராமதாஸை சந்தித்துவிட்டு வந்த உதவியாளர் கைது:
இந் நிலையில் திருச்சி சிறையில் ராமதாசை அவரது உதவியாளர் நடராஜன் இன்று சந்தித்தார். பின்னர் வெளியே வந்த அவரை திருச்சி கேகே நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தனது ஜீப்பில் கொண்டு சென்றார்.
திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நடராஜனும் அடங்குவார் என்றும், அதனால்தான் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாமக எம்.எல்.ஏக்கள் குரு-திருக்கச்சூர் ஆறுமுகம் மீண்டும் கைது:
இந் நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்.எல்.ஏ., பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட பலர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவிலும் சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி கூடுதல் நேரம் கூட்டம் நடத்தியது, அனுமதியை மீறியது போன்ற காரணங்களுக்காக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
நிலுவையில் இருந்த அந்த வழக்கில் இன்று காலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதே போல் சிறையில் இருக்கும் குரு, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரும் அந்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்காக புழல் சிறையில் இருந்து இருவரையும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
குரு செங்கல்பட்டு நீதிமன்றத்திலும் திருக்கச்சூர் ஆறுமுகம் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications