ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்பு
புதுச்சேரி: பாமக நிறுவனர் ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை உடனடியாக விடுவிக்க கோரியும் வன்னியர் சங்கம் சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது
பாமக, வன்னியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்ந் காரணமாக புதுச்சேரி யூனியன் முழுவதும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. சிறு கடை கூட திறக்கப்படவில்லை என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே இயங்குகின்றன. தற்போது, ஒரு சில தமிழ்நாடு அரசு பேருந்துகளை இயக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாமகவினர் கைது
பேருந்து நிலையம் அருகேக பாமக வன்னியர் சங்கம் சார்பில் 35க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு நிறுவனங்கள், புதுச்சேரி அரசு நிறுவனங்கள், வங்கிகள் மட்டுமே செயல்படுகின்றன. இதைத் தவிர அனைத்துக் கடைகளும், அரசு சார்பு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
காரைக்காலில் கடை அடைப்பு
அதேபோல் காரைக்காலில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி மாநில அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், காரைக்கால் வழியே செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. சில இடங்களில் ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.
அதிமுக குற்றச்சாட்டு
இந்த முழு அடைப்பு குறித்து பேசிய அதிமுக மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பழகன், அரசின் மறைமுக ஆதரவின் பெயரில் முழு அடைப்பு நடந்து வருகிறது. இதற்கு சாதிய அடிப்படையில் முதல்வர் ரங்கசாமி ஆதரவு அளித்துள்ளார். அதனால்தான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றார்.
சிதம்பரத்தில் 3 அரசுப் பேருந்துகள் கண்ணாடி உடைப்பு:
இந் நிலையில் சிதம்பரம் பகுதியில் மூன்று தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக டெப்பா அருகே கும்பகோணம்- சிதம்பரம் அரசு பேருந்தின் முன்புற கண்ணாடி ஒரு கும்பல் கல்வீச்த் தாக்கி உடைத்தது.
இதே போல நேற்று நள்ளிரவு தனியார் பேருந்தின் கண்ணாடி கல்வீசித் தாக்கி உடைக்கப்பட்டது. மேலும் சீர்காழி சாலையில் மயிலாடுதுறை சென்ற அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
தொடர்ந்த பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவம் நடைபெறுவதால் சிதம்பரம் பகுதியிலிருந்து இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications