இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு...
இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்கள் மட்டுமே. இலங்கை வாழ் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. தமிழர்களுக்கு மேலும் வேதனை அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையே ஆன ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடி உரிமை வழங்கப்படவில்லை என்று இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசே கூறியுள்ளது தான்.
இலங்கை நாட்டிற்கு கச்சத்தீவை காவு கொடுக்கும் இந்தியா- இலங்கை ஒப்பந்தம் 1974ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே இந்தப் பிரச்சனை குறித்து பேசப்பட்டு வந்தது. கச்சத் தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையே 1974ம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 26.6.1974 அன்றும், இலங்கையின் சார்பில் அன்றைய இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டாரநாயகே 28.6.1974 அன்றும் கையப்பமிட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ராஜ்யசபாவில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங், இது குறித்து அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் விரிவாக குறைந்தபட்சம் இரண்டு முறை கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
கருணாநிதி எதுவுமே செய்யவில்லை..
இதிலிருந்து, இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை இந்தியா, இலங்கை நாட்டிற்கு தாரை வார்க்கப் போகிறது என்பது நன்கு தெரியும் என்ற உண்மை தெளிவாகிறது.
இது போன்ற கருத்துரு மத்திய அரசிடம் இருப்பதை அறிந்த உடனேயே தமிழக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாநிலம் தழுவிய போராட்டத்தை கருணாநிதி நடத்தியிருக்கலாம். போராட்டம் என்று நடத்தவில்லை என்றாலும், 1960க்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் பெருபாரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அளிக்க முயன்ற போது, அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்திலே சட்ட ரீதியாக மனுத் தாக்கல் செய்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications