26/11 மும்பை தாக்குதல், பெனாசீர் கொலை வழக்குகளில் வாதாடிய பாகிஸ்தான் வழக்கறிஞர் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் 26/11 மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் சவுத்ரி ஜுல்பிகர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் 26/11 மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆஜராகி வந்தவர் வழக்கறிஞர் சவுத்ரி ஜுல்பிகர். பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக அவர் ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு இன்று அதிகாலை கிளம்பினார்.
கராச்சி கம்பெனி மார்க்கெட் பகுதி அருகே அவர் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டனர். இந்த தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலரும் படுகாயம் அடைந்தார். இருவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்சஸில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜுல்பிகர் இறந்தார்.
ஜுல்பிகருக்கு பயங்கரவாதிகள் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்திருந்தனர் என்று அவரது மகன் நிஸார் தெரிவித்தார். பெனாசீர் கொலை வழக்கில் ராவல்பிண்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications