ராமதாஸ், அன்புமணி கைது… வடமாவட்டங்களில் 3 வதுநாளாக பதற்றம்
ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பாமக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
மரக்காணம் கலவரம் தொடர்பாக தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மணி உள்ளிட்ட 363 பேர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவரைத் தொடர்ந்து வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவும், நேற்று அன்புமணி ராமதாசும் கைது செய்யப்பட்டனர். இதனையொட்டி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வன்முறை ஏற்பட்டது.

பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மரங்கள் வெட்டி சாலைகளில் போடப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர பயணத்திற்கு ரயில்களை நாடுவதால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன.
பெட்ரோல் குண்டு
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பஸ் டிப்போவில் பேருந்துகளின் மீது நேற்றிரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் பெரியபாளையத்தில் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அரசுப் பேருந்து சேதமடைந்தது.
தனியார் தொழிற்சாலை பஸ்
காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மர்ம நபரால் எரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதித் தெருவில் நிறுத்திவைத்து அதில் படுத்து உறங்கியுள்ளார் ஓட்டுநர். இன்று காலை 6.20க்குக் கிளம்பி அங்கிருந்து தொழிற்சாலை ஊழியர்களை அழைத்துக் கொண்டு அவர் செல்லவேண்டும். இந்நிலையில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், பெட்ரோலை பஸ்ஸுக்குள் ஊற்றி தீவைத்துவிட்டுச் சென்றுள்ளார். புகை வருவதை அறிந்த ஓட்டுநர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் பெரும்பாலும் தீயில் கருகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

4 ஆயிரம் பேர் கைது
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 4ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வடமாவட்டங்களில் வன்முறை நீடிப்பதால் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications