சஜ்ஜான் குமார் விவகாரம்: நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியை மறித்து சீக்கியர்கள் போராட்டம்

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜான் குமார் கடந்த 1ம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சீக்கியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீடு முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் வீடு நோக்கி பேரணி சென்றனர்.
அந்த பேரணி நாடாளுமன்ற வீதியை அடைந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சுமார் 500 சீக்கியர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியான விஜய் சௌக்கில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு வந்த எம்.பி.க்கள் ஒன்று திரும்பிச் செல்ல வேண்டியதாக இருந்தது இல்லை காரில் இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டியதாக இருந்தது.
இந்த மறியலால் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் தனது காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications