தென்காசி, செங்கோட்டைப் பக்கம் நல்ல மழையாம்டே...!
நெல்லை: தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வரும் நிலையில் தென்காசி, செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரவில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் புழுக்கத்தில் தவித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொது மக்கள் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அருவிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. நெல்லையில் கடந்த இரண்டு நாட்களாக 104 டிகிரி வெயில் அடித்தது.
ஆனால் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதி மக்களுக்கு வெயிலின் தாக்கம் எப்போதும் தெரிவதில்லை. கத்தரி வெயில் துவங்கும் சில நாட்களுக்கு முன்பாக தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கி விடும். இந்த ஆண்டும் கடந்த நான்கு தினங்களாக தென்மேற்கு பருவக் காற்று வீசுவதால் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இது சுமார் 15 நிமிடம் நீடித்தது. இந்த மழையால் குற்றாலம் அருவியில் சிறிது கூட தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications