பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
டெல்லி: இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது.
லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது.
இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகமும் நிலவுகிறது..

சீனாவில் "ராகி நல்லா" ராணுவ முகாமிற்கு அருகில் உள்ள இந்தியாவின் லடாக் பகுதி "சுமர்" ராணுவம் முகாம் பகுதியில் இந்தியா கட்டிவரும் பதுங்கு குழிகள் நடவடிக்கைகளை கைவிட, சீனாவிற்கு உறுதியளித்ததை அடுத்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீனப்பயணம் உறுதியாகி உள்ளது. இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சல்மான் குர்ஷித் சீனாவில் வரும் 9, 10 தேதிகளில் பயணம் செய்ய உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ‘ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டின் மிக முக்கிய உயர் மட்ட பேச்சு வார்த்தைகளில் ஒன்று நடைபெறப்போகிறது. சீனா எல்லையில் சமாதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட விரும்புகிறது.
சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள். எல்லை வரையறையை இனிதான் நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் தவிர்க்க இயலாதபடிக்கு எல்லையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன' என்றார்.












Click it and Unblock the Notifications