தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு: விவசாயிகள் மறியல்
மதுரை: தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் மதுரையில் வறட்சி குறித்த ஆய்வை இன்று தொடங்கியுள்ளனர். அப்போது ஆய்வுக்குழுவினரை விவசாயிகளும், பெண்களும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மத்திய குழுவினர் சென்னை எழிலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், ஆய்வு செய்யவுள்ள மாவட்டங்கள், ஆய்வின் அடிப்படை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
டெல்லியிலிருந்து வந்துள்ள 10 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஆய்வு பணிகளை நடத்துகின்றனர்.
வேளாண்துறை செயலர் பிரவேஷ் சர்மா தலைமையில், தமிழக அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கொண்ட குழு, முதலில் மதுரையில் தங்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த குழு ஆய்வு நடத்த உள்ளது.
விவசாயிகள் முற்றுகை
இதனிடையே மத்திய குழுவினரை மதுரை - சிவகங்கை சாலையில் ரிங்ரோடு அருகேயுள்ள கதிர் நகரை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 150 பேர் காலி குடங்களுடன் வழிமறித்து முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் வந்து 2 வாரமாகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் இங்கு உப்பு தண்ணீரும் கிடைப்பதில்லை என்று முறையிட்டனர்.
மத்திய குழு தலைவர் பிரவேஸ் சர்மா, காரில் இருந்து இறங்கி வந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதேபோல் ஒத்தக்கடை பகுதி மக்களும் ஊராட்சி அலுவலகம் அருகே மத்திய குழுவினரை வழிமறித்து முற்றுகையிட்டனர். இந்த பகுதியில் குடிதண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் 11 பேர்
இதேபோல் மானஸ் சவுத்ரி உள்பட 11 பேர் கொண்ட மற்றொரு குழு திருச்சியில் இன்று ஆய்வை தொடங்கியது. பளையகுறிச்சி, வேம்பூர், கல்லணையில் ஆய்வை முடித்துவிட்டு இந்த குழு தஞ்சாவூர் செல்கிறது. அங்கு ஆய்வை முடிக்கும் குழு, நாளை திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறது.
வரும் 9ஆம் தேதி வரை ஆய்வு நடத்தும் இந்த குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது. இதனிடையே, மத்தியக் குழுவினர் வரும் 9ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications