வேலியே பயிரை மேஞ்ச மாதிரி... கொள்ளையில் ஈடுபட்ட ஊர்காவல்படை வீரர்!
காரைக்கால்: நண்பரோடு கூட்டு சேர்ந்து, ஒரு இளைஞரை கடத்தி நகைகளை கொள்ளையடித்த ஊர்காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்காலை அடுத்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம் பூபதி (28). இவர் தனது பைக்கில் காரைக்கால் நோக்கி சென்று கொண்டு இருந்தார். காரைக்கால் மதகடி புதிய பாலம் அருகில் சென்ற போது, திடீரென மற்றொரு பைக்கில் வந்த இருவர் நாகரத்தினத்தை வழிமறித்து, நாங்கள் காரைக்கால் போலீஸ் என கூறியுள்ளனர்.
மேலும், நாகரத்தினத்தை வலுகட்டாயமாக தங்கள் பைக்கில் ஏற்றி, காரைக்கால் கடற்கரை சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி, நாகரத்தினத்தை மிரட்டி, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இது குறித்து, நாகரத்தினம் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஒருவர் காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஊர்காவல் படைவீரராக பணியாற்றி வரும் மகேஷ் என்றும், மற்றொருவர் அவரது நண்பர் செருமாவிளங்கையைச் சேர்ந்த சரவணன் (30) என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, ஊர்காவல்படை வீரர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து , அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை மீட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சரவணனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஊர்காவல்படை வீரர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications