காங்கிரஸ், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது - தா. பாண்டியன் உறுதி

பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணையில் மத்திய அமைச்சர்கள் தலையீடு இருப்பது தெரிய வந்துள்ளது. ரயில்வே அமைச்சரின் உறவினர் ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றை சன் டிவி நிறுவனம் பயன்படுத்தி வந்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால் இன்று வரை தயாநிதி மாறன் வீட்டுக்குத் தரப்பட்ட தொலைபேசி இணைப்புகள் அகற்றப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்துக்கு கடந்த திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி கையெழுத்திட்டவர் அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த அபாயகரமான திட்டம் நடைமுறைக்கு வந்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதேபோல, தமிழகத்தின் தீராத மின் வெட்டு பிரச்னைக்கும் திமுகதான் காரணம். அப்போதே வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான கம்பி வழிப் பாதையை அமைக்காமல் விட்டது திமுக அரசு செய்த தவறு.
திமுக தலைவர் கருணாநிதி, தமிழக மீனவர்கள் நலன் கருதி கச்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை. வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. இடதுசாரிகள், ஜனநாயக நலனுக்காகப் போராடும் கட்சிகள் அடங்கிய கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றார் தா. பாண்டியன்.












Click it and Unblock the Notifications