ஜெ. காருக்கு முன்பு சட்டையைக் கழற்றி பரபரப்பேற்படுத்திய பிச்சையாண்டி
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு முன்பு சட்டையைக் கழற்றி தனது கோரிக்கையை வலியுறுத்தி போராட முயன்ற நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர்.
நேற்று பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வரைக் காண பெரும் திரளானோர் திரண்டிருந்தனர். முதல்வரிடம் மனு கொடுக்கவும் பலர் முயன்றனர். அவர்களை கயிறு கட்டி போலீஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
முதல்வர் காரில் ஏறி புறப்பட்டபோது திரண்டிருந்த அ.தி.மு.க.,வினர் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சையாண்டி என்பவர் திடீரென தன் சட்டையை கழற்றத் துவங்கினார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை நடத்தியபோது, தீயினால் பாதிக்கப்பட்ட அவர் உதவி கோரி முதல்வர் தனிப்பிரிவில் பல முறை மனு கொடுத்ததாகவும் முதல்வரிடம் தன் காயங்களை காண்பிப்பதற்காக சட்டையை கழற்றியதாகவும், போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் அவரை முதல்வர் மனுக்கள் பிரிவிற்கு அழைத்து சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம், அவர் கொண்டு வந்த மனுவை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.
பின்னர் பிச்சையாண்டியிடம், கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதிகாரி அல்லது அமைச்சரிடம் மனு கொடுக்க வேண்டும். மாறாக சட்டையைக் கழற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
எப்படியோ தனது புகார் மனு முதல்வரின் குறைதீர்ப்புப் பிரிவுக்குப் போன திருப்தியில் அங்கிருந்து வெளியேறினார் பிச்சையாண்டி.












Click it and Unblock the Notifications