எல்லாருக்கும் வயாக்ரா... போலிகளை ஒழிக்க ஆன்லைன் வர்த்தகத்தில் குதித்த ’ஒரிஜினல்’ வயாகரா
1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'வயாகரா' மாத்திரை ஆண்மை சக்தி குறைபாடுள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந்தாகும். கடந்த 15 ஆண்டுகளாக உலகின் அதிக நாடுகளில் விற்பனையாகும் இந்த மாத்திரைக்கு இந்தியாவிலும் கடும் கிராக்கி நிலவுகிறது.
மவுசு கூடினால் மலிவு விலையில் போலிகள் உலவும் தானே. 'வயாகரா' என்ற பெயருக்கு நெருக்கமான பெயர்களை கொண்ட பல போலி மாத்திரைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தள்ளுபடி விலையில் இணைய தளங்களின் மூலம் விற்பனை செய்யத் தொடங்கின.
ஆண்மை குறைபாடுகளை நீக்கும் என்ற நம்பிக்கையில் இந்த போலி மாத்திரைகளை வாங்கி உபயோகிக்கும் பலர், நாளடைவில் பக்கவிளைவு நோய்களுக்கு ஆளாகி ஆண்மையையே இழந்துப் போகும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனராம்.
அதுமட்டுமின்றி, இணைய தளம் மூலமாக நடைபெறும் இந்த ரகசிய வியாபாரத்தால் ஒரிஜினல் வயாகரா மாத்திரையை தயாரிக்கும் 'பைசர்' நிறுவனத்தின் விற்பனையும் கணிசமாக சரிந்து விட்டதாம்.
இதனால், பைசர் நிறுவனமும் வயாகரா மாத்திரையை ஆன் லைன் மூலமாக விற்க முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் இணைய தளத்தின் வாயிலாக உலகில் எந்த மூலையில் இருந்தும் இனி மாத்திரைகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 மாத்திரைகள் கொண்ட ஒரு டப்பாவின் விலை 750 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய்) எனவும் முதல் முறையாக வாங்கும் வாடிக்கையாளருக்கு 3 மாத்திரை இலவசம் எனவும் பைசர் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அடுத்த டப்பா வாங்குவோருக்கு 30 சதவீதம் விலையில் சலுகை கிடைக்குமாம்.