சீக்கியர் படுகொலை வழக்கில் சஜ்ஜன் விடுவிப்பு- ஹை கோர்ட்டில் முறையீடு செய்கிறது சிபிஐ!
டெல்லி: சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
1984-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. டெல்லியில் 5 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரான சஜ்ஜன் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 29 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி சஜ்ஜன் குமாரை சென்ற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இது சீக்கியரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை அகாலி தள எம்.பிக்கள் எழுப்பினர்.
இந்நிலையில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications