கர்நாடகாவில் வெற்றி... நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்ட மத்திய அரசு!!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் ரயில்வே ஊழலில் அந்தத் துறையின் அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நாள்தோறும் முடக்கி வந்த நிலையில் இன்று காலை திடீரென தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் மத்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது.
லோக்சபா இன்று காலை கூடியதும் பாஜக மற்றும் சிவசேனா எம்.பி.க்கள் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சட்ட் அமைச்சர் அஸ்வனிகுமார் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் லஞ்சப் புகாரில் மருமகன் சிக்கியதால் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலும் ராஜினாமா செய்ய அவர்கள் வலியுறுத்தினர்.சமாஜ்வாடி கட்சியினர் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் 4 தலித்துகள் பலியானது பற்றி விவாதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 1984ம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று அகாலி தள எம்பிக்கள் வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி குரல் கொடுத்தனர். இந்த ஜோதியில் இடதுசாரி எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
இதனால் சபை நடவடிக்கைகள் பகல் வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டனர். பின்னர் சபை கூடியதும் தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
இதே அமளி நீடித்ததால் ராஜ்யசபாவும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. வரும் 10ம் தேதிவரை நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு நாட்கள் முன்னதாகவே ஒத்தி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதுவும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தச் செய்தியை நாடாளுமன்ற முடக்கமும், கலாட்டாவும் தூக்கி சாப்பிட்டுவிடும் என்பதால், எதிர்க் கட்சிகளின் அமளியை அடக்கி, வெற்றிச் செய்தியை பெரிய அளவில் நாடு முழுவதும் பரவச் செய்யும் வகையில் லோக்சபாவை சட்டென ஒத்தி வைத்துவிட்டது காங்கிரஸ் அரசு.
என்னென்ன ஐடியா பண்றாங்கப்பா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!












Click it and Unblock the Notifications