தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

நச்சுவாயு வெளியானதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்ததைச் சுட்டிக்காட்டினார். ஆலை மூடப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், மார்ச் 23 ஆம் தேதி அன்று வேண்டுமென்றே ஒரு பிரச்சினை உருவாக்கப்பட்டு, அதனால் ஆலை மூடப்பட்டது என்றும், ஆலை நிர்வாகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டது.
இதனை மறுத்து வைகோ தீர்ப்பாயத்தில் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை - நிலம், நீர், காற்று மண்டலத்தை நச்சு மயம் ஆக்கி வருவதால், மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையினால், தூத்துக்குடி மாநகரத்து மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். மூச்சுத் திணறலும், தொண்டை அடைப்பும் ஏற்பட்டு, அவதிப்பட்டார்கள். அதனால்தான் ஆலை மூடப்பட்டது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்படும் நிலத்து மண், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் மார்க் செர்னைக் அவர்களுக்கு அனுப்பி வைத்து, அவர் ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச் சூழல் நாசமாவதையும், அதனால் மனிதர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதையும் தந்த ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்திலும் நான் தாக்கல் செய்தேன்" என்றார்.
உடனே, தீர்ப்பாய நீதிபதி சுதந்திரகுமார், அந்த விபரங்களை இங்கேயும் நீங்கள் முன் வைக்கலாம் என்றார்.
இதற்கு இடையில், சென்னை தீர்ப்பாயம் அமைத்திருந்த நிபுணர் குழுவின் அறிக்கை இன்று டெல்லி தீர்ப்பாயத்தில் தாக்கலானது. அதனுடைய பிரதிகளை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
ஆலையை திறக்க அனுமதி மறுப்பு
இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்த நீதிபதி ஸ்வெதந்தர் குமார், ஸ்டெர்லைட் ஆலையில், கடந்த மார்ச் 23-ந் தேதி விஷவாயு வெளியேறியது தொடர்பாக, நிபுணர் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்த பின் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications