இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று கடந்த 27-ந் தேதி அரசு அறிவித்தது.
இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட உடனேயே http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.nic.in, http://www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையத்தில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இதே போன்று இலவசமாக தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 4 மணிநேர மின் தடை விலக்கு
இதற்கிடையே இன்று +2 தேர்வு முடிவுகளை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் மின் தடையில் இருந்து விலக்கு என சட்ட சபையில் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரன் ஆகியோர் ‘இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தங்கு தடையின்றி தெரிந்து கொள்ள மின் தடை விலக்கு வேண்டி கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுயதாவது, ‘தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுவதை ஒட்டி, மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் தடை விலக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ‘ என தெரிவித்தார்.
பரீட்சைக்கு படிக்க நைட்ல ஒழுங்கா கரண்ட் குடுங்கப்பானு மாணவர்கள் கதறிய போது, கண்டுக்காம... இப்போ ரிசல்ட் பாக்க மின் தடை விலக்காம். என்ன கொடுமை சார் இது...












Click it and Unblock the Notifications