கர்நாடக முதல்வர் 'வேட்டை'க்கு போகும் காங்கிரஸ் மேலிடத்தின் நால்வர் குழு!
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் மேலிடத்தின் சார்பில் 4 பார்வையாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி, மூத்த அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் கர்நாடக மாநில பொறுப்பாளருமான மதுசூதன் மிஸ்ரி, கர்நாடகாவுக்கான மற்றொரு நிர்வாகி ஃப்ளெரியோ மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் ஆகியோர் நாளை கர்நாடகம் செல்ல இருக்கின்றனர் என்றார்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 223 தொகுதிகளில் 121 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரான சித்தராமையாவும் தலித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும் முதல்வர் பதவிக்கான முதன்மைப் போட்டிகளில் இருக்கின்றனர். இவர்கள் இல்லாமல் வீரப்ப மொய்லியும் கூட முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வர் தேர்தலில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து இயல்பாக நீங்கிவிட்டார்.
காங்கிரஸ் மேலிடம் அனுப்பும் இந்த நால்வர் குழுதான் கர்நாடகாவின் முதல்வரை தேர்ந்தெடுக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications