ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த குழந்தை: சிறு காயங்களுடன் தப்பிய அதிசயம்
தர்மபுரி: ஓடும் பேருந்தில் இரவு நேரத்தில் தாயின் மடியில் உறங்கிய குழந்தை படியில் உருண்டு விழுந்து உயிர் தப்பியுள்ளது. இந்த அதிசய சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றில் மேட்டூர் டேம் பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அன்று மாலையே மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஆர்.பி அணையை பார்க்கும் திட்டத்தோடு கிளம்பியிருக்கிறார்கள்.
அந்த சுற்றுலா குழுவில் உஷா என்ற பெண்ணும் அவரது 10 மாத கைக் குழந்தையான ஸ்ரீவாணியும் இருந்திருக்கிறார்கள். உஷா தன் குழந்தையுடன் பேருந்தின் படியோரத்தில் உள்ள சீட்டில் அமர்ந்து பயணித்திருக்கிறார்.
பகலில் மேட்டூர் அணை, பூங்கா, அணை முனியப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த உஷா அசதியில் தூங்கிவிடவே, இரவு 9 மணியளவில் மடியில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ வாணி நழுவி படி வழியாக கீழே உருண்டு விழுந்து விட்டாள். அப்போது பேருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை கடந்திருக்கிறது. அவ்வழியே சென்ற உள்ளூர் பெண் ஒருவர் குழந்தை விழுந்ததைப் பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
லேசான காயங்களுடன் அழுது கொண்டிருந்த குழந்தையை உடனடியாக மீட்ட போலீஸார் தர்மபுரி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தையின் உடலில் பயப்படும்படியான பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
கே.ஆர்.பி அணைக்கு சென்ற பிறகு தான் உஷா தன் குழந்தையைத் தேடியிருக்கிறார். பதறிப்போன அனைவரும் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க. ஒருவழியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை இருப்பதை தெரிந்துகொண்டு பதறியடித்து வந்து சேர்ந்தனர். முழுவதும் குணமடைந்துவிட்ட ஸ்ரீவாணியை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். ஓடும் பேருந்தில் இருந்து உருண்டு விழுந்தும் உயிர் தப்பிய அதிசய குழந்தையை ஏராளமானோர் மருத்துவமனையில் பார்த்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications