மதிப்பெண் காய்க்கும் மரமா பிள்ளைகள்? தற்கொலைக்கு தூண்டும் மன அழுத்தம்
சென்னை: பரிட்சையில் பெயில் ஆகிவிடுவோமோ என்று பயத்தில் தற்கொலை செய்து கொள்வது ஒரு ரகம். பெயில் ஆகிவிட்டால் அவமானத்திற்கு பயந்து தற்கொலை செய்வது மற்றொரு ரகம். ஆனால் ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகி நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இரண்டு மாணவிகள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் தொடங்கி பொறியியல் கல்வி மாணவர்கள் வரை ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர். படிக்க முடியவில்லை என்றும், காதல் தோல்வி காரணமாகவும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்தது.
இதோ அடுத்த கல்வியாண்டு தொடங்கும் முன்பே மதிப்பெண் பட்டியலைப் பார்த்து தற்கொலைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றனர் இரண்டு மாணவிகள்.

தற்கொலைக்கு காரணம்
மதிப்பெண் காய்க்கும் மரமாக மாணவர்களை உருவாக்குவதுதான் அவர்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி தற்கொலை வரை தூண்டுகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பள்ளிகளில் வெறும் பாடங்களை மட்டுமே ஒப்பிக்க சொல்லி எழுதச் சொல்வதை விட வாழ்க்கையின் சவால்களை எப்படி சந்திப்பது என்று கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.

பெற்றோர்களின் அழுத்தம்
பணம் செலவழித்து படிக்கப் போடுகிறோம். அதற்கு நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்று சொல்லி சொல்லி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள்தான் இன்றைக்கு அதிகம் இருக்கின்றனர். உடன் படிக்கும் மாணவனை விட ஒரு மதிப்பெண் கூடுதலாக இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம்.

பிஞ்சு மனதில் ஏக்கம்
பள்ளி இறுதி ஆண்டுக்கு வந்துவிட்டாலே அவர்கள் விளையாட்டு, டிவி போன்ற பொழுது போக்கு அம்சங்களை தியாகம் செய்து விடுகின்றனர். 10ம் வகுப்பில் தொடங்கி 12ம் வகுப்பு தேர்வு முடியும் வரை அவர்களுக்கு ஜெயில் வாசம்தான் இதுவே அவர்களின் மனதில் ஒருவித ஏக்கத்தை உருவாக்குகிறது.

மதிப்பெண் வருமா?
இன்றைய கல்வித் தகுதி மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது. இதனால் மதிப்பெண்ணை குறிவைத்து ஓடும் மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாவிட்டால் மனதளவில் சுருங்கிப் போய்விடுகின்றனர். இதுவே அவர்களை தற்கொலை வரை தூண்டுகிறது.

நல்லா படி அது போதும்
பெற்றோர்களோ, ஆசிரியர்களோ நன்றாக படிக்கும் மாணவன் மீது அதீத கரிசனம் காட்டுவதும், சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதும் கண்கூடாக காண முடிகிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் கவனித்தாலே அவர்களுக்கு மன அழுத்தமோ வேறு எந்த சிக்கலுமே வர வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மருத்துவம், பொறியியல்
பள்ளியில் படிக்கும் போதே மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை முன்வைத்தேதான் மாணவர்களை உருவாக்குகின்றனர். இதுவும் அவர்களை அதீத மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாக விரும்பு என்று எந்த பெற்றோரும் கூறுவதில்லை. எனவேதான் பரிட்சையில் பாஸ் செய்து 1063 மதிப்பெண் வாங்கிய மாணவி கூட தற்கொலைக்கு தள்ளப்படுகிறாள்.

திணிப்பது நியாயமா?
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித் திறமை உண்டு அதனை கண்டுபிடித்து அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நர்சரி பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்கள் மீது பாடச்சுமையை திணிப்பதுதான் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள். எனவே மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதை கருத்தில் கொள்வார்களா?












Click it and Unblock the Notifications