சாதியிலிருந்து காவிரிக்குத் தாவிய டாக்டர் ராமதாஸ்...!

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், இடைக்கால ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆறு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனாலும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.
இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வளத் துறை செயலாளரும், உறுப்பினர்களாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்ப்பாசனத் துறை செயலாளர்களும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது புதிய யோசனை அல்ல. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காவிரி கண்காணிப்புக்குழுவைத் தான் புதிய பெயரில் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி ஆணையமும், மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி கண்காணிப்புக்குழுவும் பல் இல்லாத அமைப்புகளாகும்.
இவை கடந்த15 ஆண்டுகளாக செயல்பட்ட போதிலும், அவற்றின் ஓர் உத்தரவைக் கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை. எனவே தான் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் நிலையில், அங்குள்ள அணைகளை கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக் குழுவை அமைக்கலாம் என கர்நாடக அரசு வழக்கறிஞர் முன்வைத்த யோசனையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்ட போது, அதை தமிழகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய அவர்கள் தவறி விட்டனர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 19-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் திரட்டி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இதைச் செய்யவும் தமிழக அரசு தவறி விட்டது. இதன்மூலம் காவிரி மேலாண்மை அமைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது.
நடப்பு பாசன ஆண்டில் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வேதனையும் கொஞ்சநஞ்சமல்ல. வரும் ஆண்டிலும் வறட்சி தொடர்ந்தால் விவசாயிகளை காப்பாற்றவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இம்மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை கர்நாடகம் அதன் விருப்பம்போல் பயன்படுத்திக்கொள்வதைத் தடுத்து, காவிரியில் தமிழகத்திற்கு பெற உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இதற்காக எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ, அந்த வழிகள் அனைத்திலும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications