ப்ளீஸ், ராமதாஸ் மருத்துவமனையில் ரெஸ்ட் எடுக்கட்டும், யாரும் சந்திக்க வராதீர்கள்: ஜி.கே. மணி

திருச்சி சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக அரசால் அரசியல் பழி வாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் பாழடைந்த, பாலைவனம் போன்று வெப்பநிலை நிலவும் கட்டிடத்தில் அடைக்கப்பட்ட மருத்துவர் ராமதாசுக்கு சிறையிலேயே கடுமையான உடல் நலக் குறைவும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதற்காக சிறையிலேயே மருத்துவர்கள் மருத்துவம் அளித்தனர்.
சிறை மருத்துவமனையில் சேரும்படி மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும், அதை ராமதாஸ் தவிர்த்து விட்டார். திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்று விடுதலை ஆன பின்னர் ராமதாசுக்கு மீண்டும் மூச்சுத் திணறலும், உடல் நலக் குறைவும் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். ராமதாசுக்கு மருத்துவமனையில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்து ராமதாஸ் அவர்களை சந்திப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications