சாதி கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராமத்தினர்
கழுகுமலை: கழுகுமலை அருகே சாதி கட்சி நிர்வாகிகள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வேலாயுதபுரத்தில்இரண்டு சமூகத்தினர் இடையே மோதல் இருந்து வருகிறது.கடந்த ஏப்ரல் 12ம்தேதி ஒரு சமூகத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கருப்பாயி என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தரப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் , அப்பாவிகளை விடுதலை செய்ய கோரியும் வேலாயுதபுரம் கிராமத்தில் ஆதி தமிழர் பேரவை மற்றும் விடுதலை சிறுத்தைகள், சாதி கட்சியினர் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சமூகத்தினர் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றினர். இதுகுறித்து ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் கூறுகையில், கருப்பசாமி என்பவர் கொலை தொடர்பாக அப்பாவிகள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். எங்கள் ஊரில் சாதிய கட்சிகள் ஊடுருவுவதால் அமைதியின்மை ஏற்படுகிறது. இதனால் சாதி கட்சிகள் வேலாயுதபுரம் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ரேசன் கார்டுகளை வாங்க மாட்டோம். மேலும் 100 நாள் வேலை திட்டத்திற்கும் செல்ல மாட்டோம் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே கொலை சம்பவத்தை கண்டித்து கழுகுமலையில் ஆதி தமிழர் பேரவையினர் மற்றும விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பதட்டம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications