டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம்
அரியலூர்: அரியலூர் அருகே டாஸ்மாக் கடையில் சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கித்தரச் சொன்னதில் ஏற்பட்ட சண்டை கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான இடையக்குறிச்சிக்கு வந்தார்.
கடந்த 12ஆம் தேதி குமாரும் அவரது நண்பர் சக்திவேலும் இடையகுறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது, கடலூர் மாவட்டம் பிலாந்துறையை சேர்ந்த இளையராஜா என்பவர் இடையகுறிச்சியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தனது தம்பியின் திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு அவரும் அதே டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது குமார், இளையராஜாவிடம் தனக்கு சைட் டிஷ்க்காக கறி வாங்கி தர கூறியதாக தெரிகிறது. அப்போது குமாருக்கும், இளைய ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் குமார் ஆத்திரம் அடைந்து இளையராஜாவை மது பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளையராஜா இடையகுறிச்சியை சேர்ந்த தனது பெரியம்மா மகன் முத்துவேலிடம், கூறினார். ஏற்கனவே குமாரின் மேல் கோபத்தில் இருந்த முத்துவேல் அவனை கொல்ல திட்டமிட்டான்.
இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு குமார் சேலம் செல்வதாக தன்து மனைவி அம்சவள்ளியிடம் கூறிவிட்டு சென்றார். இதைக் கேட்டு குமாரை பின் தொடர்ந்தான் முத்துவேல். சேலம் செல்வதற்காக ஆண்டிமடத்திற்கு பஸ்சுக்காக காத்திருந்த குமாரை, முத்துவேலும், அவரது நண்பர் வீரமணியும் நைசாக பேசி மது அருந்தலாம் என்று அழைத்துள்ளனர்.
குமாரும் மது அருந்தும் ஆசையில் அவர்களுடன் பைக்கில் ஏறி கொண்டாராம். மூவரும் மது பாட்டில்கள் வாங்கி கொண்டு இடையகுறிச்சி அருகே உள்ள முந்திரிகாட்டிற்கு சென்று மது அருந்தினர்.
பின்னர் போதையில் இருந்த குமாரை தனது அண்ணன் இளையராஜாவை நேற்று நீதானே பீர் பாட்டிலால் அடித்தாய் என்று கேட்டு முத்துவேல் அடித்தார். தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் குமார் தலையில் அடித்ததில் குமார் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
அதன்பிறகு குமாரின் மேல் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் குமார் உயிர் போகும் வரை அடித்து கொலை செய்துவிட்டு அந்த காட்டிலேயே குமாரின் உடலை போட்டு விட்டு முத்துவேலும், அவனது கூட்டாளி வீரமணியும் தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து குமாரின் தம்பி ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் குமாரை கொலை செய்ததாக முத்துவேல்,
மற்றும் அவரது நண்பர் வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
சைட் டிஷ் வாங்கித் தரச் சொன்ன தகராறு கடைசியில் கொலையில் முடிந்துபோனது. இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications