பொய்யை மெய்யாக்க முயற்சிக்க வேண்டாம் - பாமகவுக்கு திருமாவளவன்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தொடர் வன்முறைகளுக்கு யார் காரணம் என்பதை மிகவும் அழுத்தந் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மாவட்ட வாரியாக, நாள் வாரியாக, வன்முறைகளைப் பட்டியலிட்டு சட்டப்படி மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளையெல்லாம் விளக்கியிருப்பதுடன் வன்முறைகள் மேலும் தொடருமேயானால், வன்முறைக்குக் காரணமான பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யவும் அரசு தயங்காது என தமிழக முதல்வர் எச்சரித்திருக்கிறார்.
இதன் பின்னரும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வட மாவட்டங்களில் நடைபெற்றுள்ள வன்முறைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகளே காரணம் என்று அவதூறு பரப்புவது வேடிக்கையாக உள்ளது. அத்துடன், அரசும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று துளியளவும் உண்மையில்லாத பொய்யான தகவல்களை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஒன்றின் மீது கல் வீசியதாகக் கைது செய்யப்பட்ட தேசிங்கு என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர் என்று மக்கள் தொலைக்காட்சியில் இடைவிடாமல் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்த அவர்கள், தற்போது, கைது செய்யப்பட்ட தேசிங்கு அதிமுகவைச் சார்ந்தவர் என்று கூறுகின்றனர்.
குடிபோதையில் அவர் கல்லெறிந்துவிட்டார்; அதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லையென்று அப்போதே புகார் கொடுத்தவர்கள் காவல்துறையினரிடம் ஊடகத்தினரிடமும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்நிகழ்வுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து, முதலில் விடுதலைச் சிறுத்தைகள் என்றும் இப்போது அதிமுக என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி என்னுமிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் அவர்களை விடுவித்துவிட்டதாகவும் மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
இரு சக்கர வண்டியில் அவ்வழியே வந்த இருவரைப் பிடித்து விசாரித்த காவல்துறையினர் அங்கே நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிய வந்ததும் அவர்களை விடுவித்து விட்டனர்.
அந்த இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும், விடுதலைச் சிறுத்தைகள் மீது வேண்டு மென்றே வீண்பழி சுமத்துகின்றனர்.
அதைப் போலவே, குறிஞ்சிப்பாடி அருகே கைது செய்யப்பட்ட இருவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இவற்றை, கட்சி சார்பற்ற யார் வேண்டுமானாலும் நேரிலே சென்று விசாரணை செய்து உண்மையைச் சொல்லட்டும்.
சிறு பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தது, பேருந்துகள் மற்றும் தனியார் வண்டிகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது, குடிசைகளுக்குத் தீ வைத்தது, கல்வீச்சுத் தாக்குதலில் மூவரைக் கொலை செய்தது போன்ற நடவடிக்கைகளில் வேறு எவரையும் தொடர்புபடுத்தி பொய்யாகக் கூட அவர்களால் குற்றம் சாட்ட இயலவில்லை.
விடுதலைச் சிறுத்தைகளின் மீதும் அரசின் மீதும் வீண்பழி சுமத்திவிட்டு உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பது தமிழகத்தில் தாங்கள் மட்டுமே புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாகத் தெரிகிறது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது பழமொழி. எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக உண்மைகளை மூடி மறைத்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதுதான் வரலாறாகும்.
ஆகவே, பா.ம.க.வினர் பரியை நரியாக்கவோ பொய்யை மெய்யாக்கவோ முயற்சிக்காமல் உண்மையை ஒத்துக்கொள்வதுதான் துணிச்சல்மிக்க அரசியல் நடவடிக்கையாகும். என்னைக் கைது செய்தால் தமிழகம் இப்படித்தான் நிலைகுலைந்து போகும் என்று அரசுக்கும் பொதுமக்களுக்கும் சாவல் விடுக்கும் வகையில் திட்டமிட்ட வன்முறைகளை அரங்கேற்றிவிட்டு தற்போது விடுதலைச் சிறுத்தைகளின் மீதும் தமிழக அரசின் மீதும் பழிசுமத்தித் தப்பிக்க முயற்சிப்பது ஏன்?
இந்தியாவிலேயே தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை மட்டுமே ஓர் அரசியல் உத்தியாகக் கொண்டு இயங்குகிற ஒரே அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற சாலைமறியல் தொடங்கி, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது சிதம்பரம் தொகுதியில் நடத்திய வன்முறைகள், தற்போது தருமபுரி, மரக்காணத்தில் நிகழ்த்தியிருக்கிற வன்கொடுமைகள் வரை பா.ம.க.வினரின் வரலாறு என்பது வன்முறை வரலாறாகவே அமைந்திருக்கிறது.
தலித் மக்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையே தொழிலாகவும் வன்முறைகளையே அரசியல் வாழ்வாகவும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிற பா.ம.க. மேலும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைப்பதற்கு ஏழை-எளிய தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தயாராகி வருகிறது என்பதையே பா.ம.க. நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
ஆகவே, தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக அமைதியை நிலைநாட்டுவதற்கு உரிய முன்னேற் பாடுகளை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக, எளிதில் வன்முறைக்கு இலக்காகும் ஏழை-எளிய தலித் மக்களின் குடியிருப்புகளை அடையாளம் கண்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications