மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைக்குப் போன சஞ்சய் தத்.. 20 ஆண்டுகால போராட்டம் - ஒரு பார்வை
மும்பை: நாட்டின் குடிமகன்கள் அனைவருமே சட்டத்தின் முன்சமம்தான் என்பதை இந்தியாவின் சரித்திரம் இன்னொரு முறை பதிவு செய்திருக்கிறது. புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும் சட்டத்தை மீறிய செயலுக்காக தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இந்திய நீதித்துறையின் நியதி என்பதை சஞ்சய்தத் வழக்கு நிரூபித்திருகிறது.
1993ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் சஞ்சய் தத்துக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட..இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை அவர் தமது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்பதுதான் வழக்கு.. இதற்காகத்தான் கடந்த 20 ஆண்டுகாலமாக அவர் சட்டப் போராட்டம் நடத்திப் பார்த்துவிட்டு இப்போது சட்டத்தை மதித்து சிறைக்குப் போயிருக்கிறார்.

மார்ச் 12, 1993
நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை குலுங்கியது. பிற்பகல் 1.33 மணி முதல் 3.40 மணிக்குள் 12 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயமடைந்தனர். ரூ27 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

ஏப்ரல் 19,1993
சஞ்சய்தத் தமது வீட்டில் ஏகே 56 ரக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். மொரீஷியஸில் இருந்து நாடு திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 26, 1993
தம் மீதான குற்றச்சாட்டுகளை சஞ்சய்தத் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

மே 3,1993
சஞ்சய் தத் ஜாமீனில் வெளியே வந்தார்..

ஜூலை 4, 1994
சஞ்சய் தத் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்குப் போனார்..

அக்டோபர் 16,1995
16 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் சஞ்சய்தத்துக்கு மீண்டும் ஜாமீன் மனு கிடைத்து வெளியே வந்தார்..

நவம்பர் 27,2006
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்காக சஞ்சய்தத்துக்கு சம்மன் அனுப்பியது.

நவம்பர் 28,2006
ஆயுத சட்டத்தின் கீழ் மட்டும் சஞ்சய் தத் குற்றவாளி என்றும் தடா பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

ஜூலை 2007
சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. ஏ,கே. 56 ரக துப்பாக்கி மற்றும் 9 எம்.எம்.பிஸ்டல் வைத்திருந்த குற்றத்துக்காக இத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 2, 2007
சஞ்சய்தத் மீண்டும் கைது செய்யப்பட்டு புனே எரவாடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 20,2007
சஞ்சய்தத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மார்ச் 21, 2013
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 4 வார காலத்துக்குள் அவர் சரணடையவும் உத்தரவிடப்பட்டது.

மார்ச் 28, 2013
மும்பை செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய்தத், தாம் மன்னிப்புக் கோரி மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்வேன் என்றும் அறிவித்தார்.

ஏப்ரல் 17, 2013
தாம் சரணடைவதற்கு கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் சஞ்சய் தத். மனிதாபிமான அடிப்படையில் அனுமதியும் கொடுக்கப்பட்டது.

மே 10,2013
மேலும் சஞ்சய்தத் தமக்கான தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் மே 16-ல் சரண்டையவும் உத்தரவிட்டது.

மே 16,2013
இன்று சஞ்சய்தத் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவிக்க சரணடைந்து சிறைக்குள் போய்விட்டார்.












Click it and Unblock the Notifications