தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரணடைந்தார்! உயிருக்கு ஆபத்து என வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு!

வழக்கின் பின்னணி என்ன?
மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளால் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களில் ஒரு 9 எம்எம் ரக துப்பாக்கியையும், ஓர் ஏ.கே.56 ரக துப்பாக்கியையும் சஞ்சய் தத் சட்டவிரோதமாக வாங்கிய வழக்கில் மும்பை தடா நீதிமன்றம் தத்துக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் தாம் சரணடைவதற்கு கால அவகாசம் கோரியிருந்தார்.
அதே நேரத்தில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும் மறு ஆய்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் மறு ஆய்வு
மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் அவர் சரணடைய நேற்று வரை கெடு விதித்தது.
இன்று சரணடைந்தார்
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சார்பில் அவரது வழக்குறிஞர் சுபாஷ் யாதவ் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தடா நீதிமன்றத்துக்கு பதில் புனே எரவாடா சிறையில் சஞ்சய் தத் சரணடைய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், சஞ்சய் தத் இன்று தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சஞ்சய் தத் உயிருக்கு ஆபத்தா?
இதற்கிடையே, தத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறை அதிகாரி வினோத் லோகன்டே கூறியுள்ளார். இருப்பினும் சரணடைந்துள்ள சஞ்சய்தத் முதலில் ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் எரவாடா சிறைக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications