தீவிரவாத்திற்கு எதிராக சூஃபி தலைவர்கள் தீர்மானம்
டெல்லி: தீவிரவாதத்திற்கு எதிராக சூஃபி தர்கா தலைவர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
பிறரை மிரட்டுவதில் இருந்து அப்பாவி மக்களை கொல்லும் வரையான தீவிரவாத செயல்கள் இஸ்லாத்திற்கும், மனிதநேயத்திற்கும் எதிரானது என்று நாட்டில் உள்ள முன்னணி சூஃபி புன்னியத் தளங்களின் தலைவர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து அஜ்மீர் தர்காவின் திவானும், மதத் தலைவருமான ஜெயினுல் ஆபிதீன் அலி கான் கூறுகையில்,
சூஃபி புனிதர்களை பின்பற்றுவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். தீவிரவாத சக்திகளால் நாட்டில் அவ்வப்போது தாக்குதல்கள் நடக்கின்றன என்றார்.
அஜ்மீர் தர்காவில் சூஃபி தர்கா தலைவர்களின் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது தான் தீவிரவாதத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கான் பேசுகையில்,
தீவிரவாதத்தை ஒழிக்க இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்பாவி மக்கள் யாரும் இறக்காமல் இருக்க, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்காமல் இருக்க நான் பிற மத தலைவர்களை அணுகுவேன் என்றார்.
இந்த கூட்டத்தில் பரேலி ஷரீப், கர்நாடகாவில் உள்ள குல்பர்கா ஷரீப், ஆந்திராவில் உள்ள ஹல்கத்தா ஷரீப், குஜராத்தில் உள்ள அமேதா ஷரீப், வங்க தேசத்தில் உள்ள சாட்காவ்ன் தர்கா, பீகாரில் உள்ள பகல்பூர் ஷரீப், உத்தர பிரதேசத்தில் உள்ள புல்வாரி ஷரீப், உத்தராஞ்சலில் உள்ள கங்கோ ஷரீப், நிஜாமுத்தீன் அவுலியா உள்ளிட்டவைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் 17ம் தேதி பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம்களை சிக்க வைக்கத் தான் கர்நாடக போலீசார் ஒருவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிச்சன் புகாரியின் உறவுக்கார பெண் கூறியதை வைத்துப் பார்க்கையில் அதிகாரிகளே சில பைகளில் அவரது வீட்டில் எதையோ வைத்து விட்டு அதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு சென்றுள்ளது தெளிவாகிறது என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications